Showing posts with label கவிதை துளிகள். Show all posts
Showing posts with label கவிதை துளிகள். Show all posts

Saturday, May 9, 2009

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...

ஈழதேசமே...
எங்களின்
தேர்தல் போதைக்கு
இன்று
நீங்கள்தான்
ஊறுகாய்!
வேறு வழியில்லை
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொள்கை பேசும் மக்களே...
நாற்பது பணம் காய்க்கும்
மரங்களுக்காக
நாயாய் பேயாய்
அடித்துக்கொள்ளாமல்
வேறென்ன செய்வது?
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

கொடி பிடிக்கும் தொண்டர்களே...
நேற்று கைகுலுக்கியவரை
இன்று கைகழுவவும்
இன்று கைகுலுக்கியவரை
நாளை கைகழுவவும்
பழகிக் கொள்ளுங்கள்.
குறைந்தது
இரண்டு மாதத்திற்காவது
சோற்றில் உப்பு சேர்க்காதீர்கள்.
இப்படிப்பட்டகொள்கைகளுக்காக
எங்களை
மன்னித்துவிடுங்கள்!

மன்னியுங்கள் மக்களே
மன்னியுங்கள்!
உங்கள் வறுமைதான்
எங்கள் முதலீடு.
இலவசங்களுக்கும்
மானியங்களுக்கும்
விலை போகாமலா போவீர்கள்?

நீங்கள் காரித்துப்புவது
எங்கள் கண்களுக்குத் தெரியாமலில்லை.
அதிகாரத்துடன்
கொள்ளையடிக்க
நீங்கள் அனுமதி தரும்போது
இதைக்கூட
பொறுத்துக் கொள்ளமாட்டோமா!

மே 13
உங்கள் தலையெழுத்தை
மன்னிக்கவேண்டும்
எங்கள் தலையெழுத்தை
நிர்ணயிக்கப்போகும் நாள்!

வாக்களிக்க மறவாதீர்
எனக்கில்லையாயினும்
எவனுக்காவது ஒருவனுக்கு.
ஏனெனில்
நாளை
நானும் அவனும் கூட
கூட்டணி அமைக்கலாம்!

உழவன்

நன்றி: விகடன் தேர்தல் களம் 2009

Friday, April 10, 2009

தேர்தல் அதிசயங்கள்!

அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
 
இரவிலும் 'சூரியன்' உதிக்கும்
'இலை'களும் பல வண்ணங்களில் தளிர்க்கும்!
 
கொட்டையில்லா 'மாம்பழம்' கிடைக்கும்
சாட்டையில்லாமல் 'பம்பரம்' சுற்றும்!
 
பொட்டல் தரையிலும் 'தாமரை' மலரும்!
கொட்டாமலே 'முரசு' ஒலி எழுப்பும்!
 
கர்ணணின் 'கை'கள் வீட்டிற்குள் வந்துபோகும்
கதவிடுக்கிலும் காசு முளைக்கும்!
 
ஆள்காட்டி விரலில் மை வைக்கும்வரை
ஆளில்லா வீட்டிற்குள்ளும்
ஐநூறு ஆயிரம் கிடக்கும்!
 
அதிசயங்கள் அதிசயங்கள்
இவைகள்
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
நடக்கும் அதிசயங்கள்!
 
 
உழவன்
 
இக்கவிதை யூத்ஃபுல் விகடனில் 01.04.2009 அன்று இடம்பெற்றுள்ளது.

Wednesday, March 4, 2009

விகடனில் என் கவிதை - ஈழத் தாலாட்டு!

ஈழத் தாலாட்டு!
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
மேலும் படிக்க ...
 
 
 
இதே கவிதை என் வலைப்பூவில்..
 
 
 
அன்புடன்,
உழவன்

Saturday, February 14, 2009

உழவன் சொத்து

எப்போதாவது
கார்மேகம்
காரித்துப்பும்
கரிசல்காடு
 
கலப்பை இழுத்த
களைப்பில்
கண்ணசரும்
காளை மாடு
 
ஒரு முடி
சோளத்தட்டையில்
ஒட்டுப் போட்ட
கூரை வீடு !
 
எருக்கள் சிதறி
ஏரோட்டி
எங்கள் பிழைப்பு
நகர்கிறது
அரை வயிரோடு
 
சொத்து மதிப்பில்
குறைந்திருந்தாலும்
உலகிற்கே
சோறு போடும் பாக்கியம்
எங்களுக்கு மட்டுமே !
 
 

Friday, February 13, 2009

மரம் வளர்ப்போம் !

ஏற்றிச் செல்லும்
வண்டிகளைப்
பார்க்கும்போதுதான்
மனம் பதைக்கிறது.
 
இது
எத்தனை மரங்களின்
எலும்புத்துண்டுகளோ என்று !
 
உழவன்

Thursday, February 12, 2009

மாநரக வாழ்க்கை

ஏழு மாதமல்ல
ஏழு ஆண்டுகள் ஆனாலும்
எதிர் வீட்டில் இருப்பது
யாரென்று தெரிந்துகொள்வதில்லை!
 
எத்தனை மாதங்களோ
இதே பேருந்து நிறுத்தத்தில்தான்
ஏறுகிறேன் இறங்குகிறேன்
என்னோடு பயணிப்பவர்களிடம்
இதுவரை அறிமுகம்
ஆனதே இல்லை!
 
கோவில்
சந்தை
பேருந்து நிலையம்
கடைத்தெரு.. இப்படி
நாள்முழுக்க
எங்கெங்கு சுற்றினாலும்
உறவு சொல்லி அழைக்க
இங்கு யாருமில்லை - அட
எவரையேனும் எவராவது
அழைக்கும் குரல் கூட
காதில் விழுந்ததில்லை!
 
பட்டப் பகலில்
தெருமுனை வீட்டின்
பூட்டை உடைப்பதைப்
பார்க்கும் நாம்
ஐயோ பாவம்
சாவியைத் தொலைத்துவிட்டான் போலும்
என பரிதாபப் பட்டுக்கொண்டே
அவசரமாய் எங்கோ செல்கிறோம்
வீடு திரும்பும்போதுதான் தெரிகிறது
அந்த வீட்டில்
அத்தனையும் திருடு போனது!
 
கோலி, பம்பரம்
கில்லி, கிளித்தட்டு
கபடி, பாண்டி
எங்கே?
தியேட்டரும், பீச்சும் தான்
பொழுது போக்கு இங்கே!
 
இரவில் கூட வீட்டைப் பூட்டாத
என் கிராமத்து வாழ்க்கை - இங்கு
நாள் முழுக்க பூட்டிய வீட்டினுள்
புழுங்கியே கிடக்கிறது!
 
வெள்ளத்தில் வீடுகள் மிதந்தாலும்
குளிக்க ஒரு குளம் கூட இல்லையடா
குடிக்கும் ஒரு செம்பு தண்ணீரும்
இங்கு பணம் தானடா!
 
வாசல் தாண்டி வந்துவிட்டால்
எல்லோரும் இங்கு அநாதையடா!
செயற்கை சிரிப்பினில்தான்
நகருது நகர வாழ்க்கையடா!
 

Tuesday, February 10, 2009

ஈழத் தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
எங்கோ ஒரு மூலையிலோ
ஏழை வயிற்றினிலோ
அங்கு நீயும் பிறக்காமல்
இங்கு வந்து பிறந்தாயே
என் ஈழ மகனே ..
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
நீ தூங்க நான் பாடும்
தாலாட்டல்ல இது
என் செல்ல மகனே
தாலாட்டுக்குக் கேட்டுத் தூங்கும்
தலையெழுத்தும் நமக்கில்லை
என் செல்ல மகனே ..
 
பாட்டின் வழி
நான் ஊட்டும் பாசமடா
தாய்மண் பாசமடா
என் செல்ல மகனே
நாளை இங்கு தமிழ் வாழ
தூக்கம் கொள்ளாது போராடும்
துணிச்சல் வேணுமடா
என் செல்ல மகனே ..
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
நேற்றுனக்கு தொட்டில் கட்டிய
வேப்பமரம் இப்போதில்லையே
என் செல்ல மகனே
சமாதிக்குப் பறித்துப்போட்ட
பூக்கள் வாடும்முன்னே
நாம் கூட சமாதியாகலாம்
என் செல்ல மகனே ..
 
சிந்திய நம் குருதியால்
இந்தியப் பெருங்கடல்
சிவந்தது என் செல்ல மகனே
மார்பினில் குண்டு தாங்கி
மண்ணில் உரமான
மாவீரனின் வாரிசு நீ
என் செல்ல மகனே ..
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
மண்ணைக் கரைத்துதான்
சேனை வைத்தான் உன்
மாமன்காரன்
என் செல்ல மகனே
ஈழக்குருதி சிந்திய
யாழ்மண்ணில் செய்த
பொம்மைதான் உன் கையிலிருக்கு
என் செல்ல மகனே ..
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
நாளைய சூரியன்
நமக்காகத்தான் என் செல்ல மகனே
நம்பிக்கையோடு போராடுவோம்
என் செல்ல மகனே ..
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 

Monday, February 9, 2009

சென்னை கிரிக்கெட்

ஆட்டம் பரபரப்பாகவும்
விறுவிறுப்பாகவும்
போய்க்கொண்டிருந்தது
 
பவுண்டரியில் பீல்டிங்
செய்த நான்
பறந்து வந்த பந்தை
வேகமாய் ஓடிச்சென்று பிடித்துவிட்டு
விக்கெட் விழுந்த
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்
 
என்னைப் போலவே
எனதருகில் நின்று
பீல்டிங் செய்த ஒருவர்
"பாஸ்.. அது எங்க பால்"
என்றபோதுதான்
எனக்குப் புரிந்தது
அவன் பிடிக்க வேண்டிய பந்தை
நான் பிடித்து
அவர்களுக்கு
பீல்டிங் செய்துள்ளேன் என்று !
 
தீப்பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட குச்சிகள் போன்று
இருந்த மைதானத்தைப் பார்த்தபோது
 
மிளகாய் மாரு பிடுங்கப்பட்ட
பல ஏக்கர் பொட்டல்காட்டில்
பதினோரு பேரு கூட இல்லாமல்
கிரிக்கெட் ஆடிய
அந்த நினைவுகள்
சச்சின் அடித்த பவுண்டரியாய்
விர்ரென்று ஒரு விநாடி வந்து போனது !
 

Tuesday, January 6, 2009

வித்தியாசம்

10 பைசா கேட்டால் பிச்சைக்காரன்
10 லட்சம் கேட்டால் மாப்பிள்ளை
 
 
"தமிழோடு" க்காக
அசோக்குமார்

Monday, January 5, 2009

பண்டிகைச் சோறு

நான்கு தெருவாவது
சென்றால்தான்
ஒரு வேளை சோறு
 
இன்று
புத்தாண்டாம்
முதல் தெருவிலேயே
என் சோற்றுப்பாத்திரம்
நிரம்பி வழிகிறது
 
யாருக்குத் தெரியும்
நேற்று நான்
பட்டினி கிடந்தது !
 
பசிக்கு சோறுபோடக் கூட
பண்டிகை நாட்கள் வேண்டுமோ?
 
 
உழவன்

Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்து !

ஜனவரி
மாதமுள்ள
காலண்டர் போல
மகிழ்ச்சி
தடித்திருக்க
வாழ்த்துவோம் !
 
டிசம்பர்
மாதம் மட்டுமே உள்ள
காலண்டர் போல
துன்பம்
மெலிந்திருக்க
வேண்டுவோம் !
 

Friday, December 26, 2008

நினைவு தினம்

ஒரு சொட்டுக்
கண்ணீரில்
சிதைந்து போன
விடைக்கு
முழு மதிப்பெண் !
 
ஓடிப் பிடித்து விளையாடிய
கடற்கரை மணலில்,
நண்பனைத் தொலைத்த ஞாபகம்
ஒரு வினாடி
வந்துபோனது
 
நடந்து முடிந்த
அரையாண்டுத் தேர்வில்
சுனாமி வந்த தினம் எது?
என்ற வினாவிற்கு
விடையளிக்கும்போது !
 
 

Friday, December 5, 2008

ஏனோ?

பத்து ரூபாய்

தோசைக்கு
முப்பதும்,

பதினைந்து ரூபாய்
பழச்சாறுக்கு
நாற்பதும் கொடுத்ததோடு

பகட்டுக்காக
டிப்ஸ் வேறு கொடுத்துவிட்டு,

வாசல்முன் வந்து நிற்கும்
காய்கறிகாரனிடமும்
அறுந்துபோன செருப்பைத்
தைத்துக் கொடுப்பவனிடமும்

இரண்டு ரூபாயாவது
பேரம் பேசாவிட்டால்
மனம் அடங்காது
போவது ஏனோ?

Tuesday, November 18, 2008

மின் தட்டுப்பாடு

பள்ளிக் குழந்தைகள்

பாடம் படித்துக் கொள்ளட்டும்

சூரியனே..
உன் மாலைப் பொழுதை
சற்று நீட்டித்துக் கொள் !

வீட்டு பட்ஜெட்டில்
மெழுகு வர்த்தியின்
எண்ணிக்கையாவது
சற்றுக் குறையட்டும்
மின்மினிப் பூச்சிகளே
எங்கள் வீட்டிற்குள்
வந்து விளையாடுங்கள் !

எரியாத தெருவிளக்கின் அடியில்
எப்படி பூ விற்பாள்
எங்கள் ஊர் பூக்காரி ?
நிலாவே
அமாவாசையன்றும் கூட
சிறிது நேரம் வந்துவிட்டு போ !

எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்
எப்படி எங்களால்
ஒரு ருபாய் அரிசியில்
கல் பொறுக்க முடியும் ?
பூமிக் கூரையிலிருக்கும்
விண்மீனே .. எங்கள்
கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?

இருக்கிறது என்பதற்காக


இருளைப் பகலாக்கி

விளையாட்டுப் போட்டி கண்டோம் !

குளிர் காலத்தில் கூட

குளிர் அறை கேட்டோம் !


முழத்துக்கொரு விளக்கு வைத்து

பொதுக்கூட்டம் போட்டோம் !

கொசு மட்டுமே நடமாடும்

நடு இரவில் கூட

விளக்கு வைத்து

விளம்பரப் பலகையை

மினுங்க வைத்தோம் !

அலங்கார விளக்குகள் நடுவே
அமைச்சரை அழைத்து வந்தோம் !

இருந்தது தீர்ந்ததால்
இருளாகிப் போனது இப்போது !

இயற்கையே ...
இருளைப் போக்க
நீ
வருவது எப்போது ?

Saturday, November 8, 2008

கரிசக் காட்டுப் பொண்ணு

அதிகால எந்திரிச்சு

அள்ளி முடிஞ்சி
அடச்ச கோழி திறந்து விட்டு
ஆடு மாடு சாணம் அள்ளி
முத்தம் பெருக்கி
வாச தெளிச்சி
பருத்தி மாரெடுத்து பத்த வச்சி
துருத்தி போல வாயால ஊதி
கடுங்காப்பி கொதிக்கும்போது
தட்டி என்ன எழுப்பிடுவா !


பக்கத்துக் கம்மாயிக்கே
பத்து நடை போகனுமேனு
ரெட்டைக் குடம் சுமந்து
பத்துக் குடம் தண்ணியெடுப்பா !

ஆட்டுக் குட்டிக்கு
அறுத்து வந்த அகத்திக்கீரையில
அஞ்சாறு ஆஞ்செடுத்து
பச்சவாடை போகும்வரை
பக்குவமாய் வதக்கி வச்சி
பழைய சோத்துக்கே ருசி சேத்திடுவா !

மாட்டு வண்டி போட்டுக்கிட்டு
மத்தியானக் கஞ்சியோடு
மாமன் நான் போகும்போது
தட்டைப் பயறு அவிச்சி
தாளிச்சுக் கொடுத்தனுப்புவா !

மஞ்சனத்தி நிழலில
கஞ்சி குடிக்கும் பொழுதில
மகராசி அவள நெனப்பேன்
தின்னாளோ இல்லையானு நான் தவிப்பேன்
அவிச்சித் தந்த பயறில
அவளுக்காக மிச்சமும் வைப்பேன்
பொழுது சாஞ்சி வீடு போயி
அவ கையில நான் கொடுப்பேன் !

பொட்டப்புள்ள பெத்ததால
பொங்கலு தீபாவளி
எங்களுக்கு இல்ல
பொசுக்குனு செலவழிக்க
பொட்டியில காசும் இல்ல - அவ
காடு கரைக்குப் போகாத நாளுமில்ல
கடைசிவரை உழைக்காத பொழுதுமில்ல !

களை எடுப்பா கதிர் அறுப்பா
பாத்தி கட்டி நாத்தும் நடுவா
வயசு வந்த பொண்ணுக்காக
வாயக்கட்டி வயித்தக்கட்டி சேத்துவப்பா!

தாலி கட்டுன நாளுல இருந்து
பேரன் பேத்தி எடுத்தது வரை
உனக்குனு ஒருநாளும் நீ வாழலியே
வீதியில என்ன விட்டுவிட்டு
நீ மட்டும் இப்ப பரலோகம் போறீயே!

என் முழு உசுரும் நீ தானடி
இப்போ நீ இல்ல நான் பிணம் தானடி
உனக்கு மட்டுமா இந்த ஆறடி
நானும் வாரேன் கூட்டிட்டுப் போடி!

Thursday, November 6, 2008

விண்ணப்பம்

மலிவு விலையில்
மளிகைச் சாமான்கள்

50 ரூபாய்க்கு
10 எண்ணமாம் !

அரசே.. எப்போது
வீட்டிற்கு ஒரு
விசிறி தரப் போகிறீர்கள்?

உழவன்
http://tamiluzhavan.blogspot.com/
http://tamizhodu.blogspot.com/

Saturday, October 25, 2008

தீபாவளி வாழ்த்துமடல் !

என்று வரும் என்று வரும் என்று
எதிர்பார்த்திருந்த நாளும் வந்ததே!
எல்லோர் வீட்டிலும் இனிய
தீப ஒளி பிறந்ததே!
 
கந்து வட்டியோ - இல்லை
கடன் அட்டையோ
செலவுகள் தந்தாலும்
உறவுகளோடு மகிழும் தருணமும் வந்ததே!
 
பரட்டைத் தலைகளைப்
பதப்படுத்தும் எண்ணெய்க் குளியலோடு
நரகாசூரனுக்குத் தவசம் கொண்டாடி
நாடெல்லாம் வெடி வெடிக்கும்
நன்னாளும் வந்ததே!
 
பட்டாசுச் சத்தங்கள் இடிகளானதோ
வெடிகளால் சூழும் புகை மேகமானதோ
அறியாது மயில்களும் ஆடுகிறதே!
 
மஞ்சள் வைத்த புத்தாடை
பகிர்ந்து உண்ணும் பலகாரம்
இருட்டினில் சிரிக்கும் மத்தாப்பு
இதயத்தில் தீபங்கள் ஏற்றட்டும்!
 
எங்கு வெடிக்குமோ
என்ற பீதியில் நாம்..
எப்போது நிற்குமோ
எதிர்பார்ப்பில் ஈழத்தமிழன்
 
உயிர் குடிக்கும் குண்டுச் சத்தங்கள் ஒழியட்டும்
உள்ளம் மகிழ்விக்கும் சரவெடிகள் வெடிக்கட்டும்!
 
இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்!
 
உழவன்
http://tamiluzhavan.blogspot.com
 
 
 

Tuesday, August 26, 2008

உழவு காப்போம்!

குள்ளன்

உலக அதிசயம் ஏழாம் 

எட்டாவதாக என்னையும் சேர்த்து
கொள்ள போகிறார்களாம்!!
உயர்ந்ததற்க்காக அல்ல,
குறைந்ததற்க்காக
 
"தமிழோடு" க்காக
திலகவதி