Thursday, June 5, 2008

அமெரிக்க பெண் கற்பழிப்பு?

சென்னை: அமெரிக்க ஆசிரியை கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சையில் கைது செய்யப்பட்டுள்ள இரு தொழிலதிபர்களுக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை டி.டி.கே. சாலையை சேர்ந்தவர் ஆண்ட்ரூ பெக்கர். கீழப்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி கெல்லி பெக்கர் (27) அமெரிக்கன் பள்ளி ஆசிரியையாக உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர்கள் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு பெக்கர் தம்பதி அடையார் பார்க் ஹோட்டலுக்கு மது அருந்தச் சென்றனர். ஒரு கட்டத்தில் ஆண்ட்ரூபெக்கர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். ஆனால், கெல்லி பெக்கர் மட்டும் தனது பெண் தோழியுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது தொழிலதிபர்களான ஜோஸ் மாத்யூ மற்றும் அவரது நண்பரான ஷாஜி ஜான் ஆகியோர் கெல்லியுடன் சேர்ந்து மது அருந்தினர். பின்னர் 3 பேரும் காரில் ஏறிச் சென்றனர்.

அன்று நள்ளிரவுக்கு மேல் அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் சாலையோரம் கிடந்தார் கெல்லி. அவரை இரு பிபிஓ ஊழியர்கள் மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இதையடுத்து அடுத்த நாள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் கெல்லி. அதில், தன்னை அழைத்துச் சென்ற மாத்யூவும் அவரது நண்பரும் பலாத்காரம் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தார். மேலும் செல்போன், கைப்பை ஆகியவற்றையும் அவர்கள் திருடிச் சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜோஸ் மாத்யூ மற்றும் ஷாஜி ஜான் ஆகியோர் போலீஸில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தவும் தீர்மானித்தனர்.இதற்கு சைதாப்பேட்டை கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி, நேற்று இருவரும் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் விந்து எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சோதனையின் முடிவு இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கெல்லிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்னும் வரவில்லை.இதற்கிடையே, ஜோஸ் மாத்யூ, நட்சத்திர ஹோட்டல் மதுபார்களுக்கு அடிக்கடி வருவது வழக்கம் என்றும், தன்னுடன் வர விரும்பும் பெண்களை அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பது வழக்கம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே கெல்லியுடனும் அவர் உறவு கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். நன்றி: தேட்ஸ் தமிழ்

0 comments: