Thursday, June 5, 2008

புத்தகப் பையில் தாலி

பண்ருட்டி: பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளார் தாய். ஆனால், முதலிரவில் கொடுமைப்படுத்தப்பட்ட அந்த மாணவி தாலியைக் கழற்றி புத்தகப் பையில் வைத்துக் கொண்டு கணவர் வீட்டிலிருந்து தப்பி பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளார்.

பண்ருட்டி அருகே பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த கணவரை இழந்த பெண் ராணி (35). இவருக்கு 2 மகன்களும் வள்ளி என்ற 17 வயது மகளும் உள்ளனர்.வள்ளி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வள்ளியை கடந்த மாதம் மணிகண்டன் (32) என்பவருடன் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார் தாயார்.

இந் நிலையில் கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த வள்ளி, தனது தோழிகளிடம் தனக்கு கட்டாயக் கல்யாணம் நடந்தது குறித்து அழுதபடியே கூறியிருக்கிறார்.மேலும் புத்தக பைக்குள் வைத்திருந்த தாலியையும் எடுத்துக் காட்டி அழவே பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தலைமை ஆசிரியர் வைத்தியநாதசாமி, மாணவி மற்றும் அவரது தாத்தா தேவராசுவிடம் விசாரணை நடத்தினார்.அப்போது மாணவி வள்ளி, தலைமை ஆசிரியரிடம், நான் வீட்டிற்கு போக மாட்டேன். என்னை வீட்டுக்கு அனுப்பினால் விஷம் குடித்து தற்கொலை செய்து விடுவேன். என்னை இங்கேயே விடுதியில் தங்கி படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி கதறினார்.இதையடுத்து வள்ளியை காடாம்புலியூர் காவல் நிலையத்துக்கு தலைமை ஆசிரியர் அழைத்துச் சென்றார்.அங்கு வள்ளி தனக்கு கட்டாய திருமணம் நடந்தது குறித்து போலீசாரிடம் புகார் தந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,எனக்கு வயது 17. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோகும் மணிகண்டன் என்பவருக்கும் எனக்கும் சத்திரம் கிராமத்தில் வைத்து எனக்கு எனது அம்மா கட்டாய திருமணம் செய்து வைத்தார்.அன்று இரவு மணிகண்டன் வீட்டில் முதலிரவு நடந்தது. நான் பூப்படையாததால் முதல் இரவுக்கு சம்மதிக்காமல் மறுப்பு தெரிவித்தேன்.

இதனால் ஆத்திரம் கொண்ட மணிகண்டன் என்னை அடித்து துன்புறுத்தினார். எனது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அன்று இரவே என்னை என் அம்மாவுடன் எங்கள் ஊருக்கும் அனுப்பி வைத்தனர்.ஆனால் மறுநாள் காலை திரும்பவும் எனது அம்மா மணிகண்டன் வீட்டில் என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டார். மணிகண்டன் வீட்டில் என்னை மணிகண்டனும், அவருடைய அம்மா, அக்கா ஆகியோரும் அடித்து சித்ரவதை செய்தனர்.இந் நிலையில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மணிகண்டன் கட்டிய தாலியை கழற்றி புத்தக பையில் வைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு வந்துவிட்டேன்.

நான் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை. தொடர்ந்து படிக்க நினைக்கிறேன். நான் தொடர்ந்து படிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றார் வள்ளி.இந்த விவகாரத்தில் போலீசார் என்ன முடிவு செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்

0 comments: