Monday, June 9, 2008

ஸ்ரீசாந்த்துக்கு பதில் கோனி

டெல்லி: வங்கதேச முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் காயமடைந்திருப்பதால் அவருக்குப் பதில் மன்ப்ரீத் சிங் கோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில், சேர்க்கப்பட்டிருந்த ஸ்ரீசாந்த் காயமடைந்துள்ளார். இதையடுத்து அவருக்குப் பதில் கோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்த கோனி சிறப்பான முறையில் பந்து வீசியதைத்தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்ரீசாந்த் காயமடைந்திருப்பதால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வுக் குழுவினர், கோனியை தேர்வு செய்துள்ளனர்.பெங்களூரில் டாக்டர் கிஞ்சா, ஸ்ரீசாந்த்தை ஆய்வு செய்தார். அப்போது 2 வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் பின்னரே ஸ்ரீசாந்த் சகஜ நிலைக்கு வர முடியும்.எனவேதான் ஸ்ரீசாந்த்துக்கு ஓய்வு தரப்பட்டு அவருக்குப் பதில் கோனி சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பைப் போட்டியில் ஸ்ரீசாந்த் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 17 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் கோனி.ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யூசுப் பதான், பிரக்யான் ஓஜா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. தற்போது கோனிக்கும் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: