Monday, June 9, 2008

திருநெல்வேலி அல்வாவுக்கும் காப்புரிமை (patent) வந்திருமோ?

ஹைதராபாத்: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுக்கு காப்புரிமை (patent) பெற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து திருப்பதி லட்டு என்ற பெயரில் இனி வெளியில் யாரும் லட்டு விற்க முடியாது.

லட்டுவுக்கு காப்புரிமை பெற விண்ணப்பமும் அளிக்கப்பட்டு விட்டதாம்.திருப்பதியில் கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட இரண்டரை கோடி லட்டுக்கள் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஆனால் திருப்பதியிலேயே பலர் லட்டு தயாரித்து அதை கோவில் லட்டு, பிரசாதம் என்று கூறி விற்பனை செய்கின்றனர். இதைத் தடுக்கவே லட்டுக்கு காப்புரிமை பெற கோவில் நிர்வாகம் தீர்மானித்தது.திருப்பதி லட்டுப் பிரசாதத்திற்கு காப்புரிமை கிடைத்து விட்டால், அதன் பின்னர் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாரும் லட்டு விற்க முடியாது. போலியான முறையில் திருப்பதி லட்டு என்று கூறி யாராவது விற்பனை செய்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

திருப்பதி லட்டு முதலில் ஆரம்ப காலத்தில் ஒரு அணாவுக்கு (அதாவது 6 பைசாவுக்கு) விற்கப்பட்டது. அப்போது லட்டு 500 கிராம் எடை கொண்டதாக இருந்தது. பின்னர் 1960ம் ஆண்டு அளவு 180 கிராமாக குறைக்கப்பட்டது. அதே சமயம், விலை ஒரு ரூபாயாக உயர்ந்தது.2002ம் ஆண்டு லட்டின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதே விலையில்தான் லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 80 வருடங்களாக திருப்பதியில் லட்டு பிரசாதம் வழங்குவது வழக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் 3 லட்சம் பக்தர்கள்:இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தரிசனம் செய்ய 4 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தகவல் மையம், தங்கும் விடுதி, முன்பதிவு மையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.இன்றைய நிலவரப்படி ஏழுமலையானை தரிசிக்க 3 லட்சம் பக்தர்கள் திருமலையில் காத்துக் கொண்டுள்ளனர். விரைவு தரிசனத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் தினமும் 70,000 பக்தர்களே தரிசனம் செய்ய முடிகிறது.

முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்துக் கொண்டுள்ளனர்.

டோக்கன் இல்லாமல் இலவச உணவு:இந் நிலையில் திருமலையில் இன்று காலை முதல் டோக்கன் இல்லாமல் அனைவருக்கும் இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இங்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள் இலவச உணவு சாப்பிடுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அல்வாவுக்கும் காப்புரிமை (patent) வந்திருமோ?

0 comments: