Monday, May 26, 2008

நெல்லையும் முத்து நகரும் - ஒரு பார்வை!

தமிழின் தோற்றம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

அல்வா

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது

தாமிரபரணி ஆறு

நெல்லையில் பாயும் புகழ்பெற்ற வற்றாத ஜீவ நதி தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.


காந்திமதி நெல்லையப்பர் கோவில்

நெல்லையின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதுதான் காந்திமதி நெல்லையப்பர் கோவில். விழாக் காலங்களில் குறிப்பாய், தசரா, ஆவணித் தேரோட்டம் போன்ற சமயங்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும். ஸ்ரீரங்கத்தில் உள்ள சந்திரபுஷ்கரணிபோல் இங்கே ஒரு பொற்றாமரைக்குளம் உள்ளது.

அறிவியல் மையம்

நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையை அடுத்து அமைந்துள்ளது அறிவியல் மையம். இங்கு கருத்தரங்கம், பள்ளி, கல்லூரி மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனைச் சுற்றி பூங்காவும் அமைந்துள்ளது.

பாபநாசம்

நெல்லையிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம். பாபநாசம் மலையில் உள்ளது புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி. திருவிழாக் காலங்களில் தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இங்குள்ள கோவிலில், காணிக்கைகள் செலுத்தும் பக்தர்கள் ஏராளம்.

கழுகுமலை

கோவில்பட்டிக்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,300 அடி உயரள்ள இந்தக் கழுகுமலை சுற்றுலா பயணிகளின் சுக வாசஸ்தலம். இங்கு வீற்றிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்னும் கருத்து இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

தென்காசி

நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரனாசி) என்று அழைக்கப்படும் இந் நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது. அழகு மிகுந்த சிற்பங்கள் பல, இங்குள்ள கோவில்களில் அமைந்துள்ளன.

ஸ்ரீவைகுண்டம்

இங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.

மணப்பாடு

1581 ல் கட்டப்பட்ட ஹோலி கிராஸ் தேவாலயம் இந்த ஊரில்தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமாக விளங்கும் இந்த தேவாலயத்தில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புதுவருடம் போன்ற விழாக்கள் சிறப்பு ஜெபங்களுடன் கொண்டாடப்படும்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

குலசேகரப்பட்டினம்

இது தென்மாவட்டங்களில் தசரா பண்டிகைக்கு பெயர் பெற்ற இடம்.

குற்றாலம்

அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகம் தவிர உலகில் வேறு எந்த நாட்டிற்கும் கிடையாது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும்.

இயற்கை வளமிக்க தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்றவை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாகும். இதில் குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவமழை மும்பையில் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலையில் பொழிகிறது.

குற்றாலம் என்றதும் எல்லோருக்கும் நினைவில் வருவது மனதை கொள்ளை கொள்ளும் வெள்ளை அருவிகளும், இலவசமாய் வித்தை காட்டும் மந்திக் கூட்டங்களும், மலைமுகடுகளை தொட்டு செல்லும் வெண்பஞ்சு மேகங்களும்தான்.

குற்றாலம் மலையிலிருந்து கிளம்பிப் புறப்படும் பூங்காற்று உடலுக்கு இதம் அளிப்பதோடு, நோயாளிகள் குணம் பெறவும் உதவுகிறது. இந்த அருவி நீரில் குளிக்கும்போது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி சுறுசுறுப்பையும் பூரிப்பையும் அளிக்கிறது.

எந்த அருவிநீரும் இத்தகைய நன்மைகளை அளிப்பதில்லை என 1811ல் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளனர்.

தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகொடிகள் உள்ளன. இந்த மூலிகை செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது.

இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் களை கட்டத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.

குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேனீக்கள் அதிகமாக உள்ளன. இங்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.

இதற்கடுத்து பேரருவி உள்ளது. இது ஆரம்ப காலத்தில் மிகவும் ஆபத்தான அருவியாக இருந்திருக்கிறது. இங்கிருந்து அரை கி.மீ தொலைவில் சிற்றருவி உள்ளது.

ஐந்தருவி 40 அடி உயரத்திலிருந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இங்கு முருகன், சாஸ்தா கோவில்கள் உள்ளன. இன்னும் பழத்தோட்ட அருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி என பல அருவிகள் உள்ளன.

குற்றாலத்திலிருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 பேர், 4 பேர் செல்லும் படகுகள் என தனித்தனியாக உள்ளன. இங்கு சிறுவர் நீந்தி விளையாட நீச்சல்குளமும், மீன்கள் காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தொல்பொருள் ஆய்வகமும் உள்ளது.

குற்றாலத்திற்கு வருபவர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது உடல் உபாதை போக்கும் பலவகையான மஸாஜ்கள். மசாஜும், மத மதவென கொட்டும் தண்ணீரில் குளித்துத் திளைப்பதும், மறக்க முடியாத பேரனுபவம்.

நினைத்தாலே முக்தி தரும் காசி விஸ்வநாதர் போல் திருகுற்றாலநாதரும் பிரசித்தி பெற்றவர். தமிழகத்தில் நடராஜர் நடனமாடிய 5 சபைகளில் இது [சித்திர சபை]]யாகும். இங்கு குறுமுனி என்றழைக்கப்பட்ட தமிழ் மாமுனி அகத்தியர் வழிப்பட்ட சிவபெருமான் சன்னதி உள்ளது.

அருவிகளில் விளையாடவும், ஆண்டவனிடம் சென்று அவனது அருள் பெறவும் குற்றாலம் ஒரு சிறந்த தலம்.


குற்றாலத்தில் உள்ள கோவில்

இங்குள்ள குற்றாலநாதர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தக் கோவிலில் உள்ள கற்தூண்களில் பொறிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள் மூலம் நாம் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சங்கரன்கோவில்

இங்குள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

குலசேகரப்பட்டினம்

திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

தூத்துக்குடி

நெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.

பத்தமடை

நெல்லையை ஒட்டியுள்ள பத்தமடை பாய் நெய்வதற்குப் பெயர் போன இடமாகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எட்டையபுரம்

புரட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாளங்குளம்

யாதவ அரசன் "மாவீரன் அழகுமுத்துக்கோன்" அரசாண்ட இடம். ஆங்கிலேயருக்கு எதிராகக் முதன்முதலில் குரல் கொடுத்தவர்

ஓட்டப்பிடாரம்

விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

பாஞ்சாலங்குறிச்சி

17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்துகொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் இன்றும் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.

கட்டபொம்மன்கோட்டை

1974 ல் தமிழக அரசால் கட்டப்பட்டது தான் கட்டபொம்மன்கோட்டை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றிப்பார்ப்பதன் மூலம் இதன் வரலாற்று முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

மாஞ்சோலை

மாஞ்சோலை மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள எஸ்டேட்டில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

கும்பாவுருட்டி அருவி - பாலருவி

குற்றாலத்தில் உள்ள அருவிகள் உலகப் புகழ் பெற்றவை என்பது தெரியும். ஆனால் குற்றாலத்திற்கு அருகேயும் சில அருவிகள் உள்ளன. அவையும் சுற்றுலா பயணிகளை சமீபகாலமாக ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்திற்கு அருகே, கும்பாவுருட்டி அருவி மற்றும் பாலருவி ஆகியவை பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி உள்ளிட்ட 7 அருவிகளும், பாபநாசம் மலைப்பகுதியில் பானதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாலருவி, கரடியருவி போன்றவை உள்ளன.

இந்த அருவி குற்றால அருவி போல் உயரமான இடத்திலிருந்து விழுகிறது. அதேபோல் புகழ்பெற்ற அச்சன் கோவிலுக்கு செல்லும் வழியில் கும்பாவுருட்டி அருவி, மணலாறு ஆகியவை உள்ளன.

செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக இந்த அருவிக்கு செல்ல வேண்டும்.

கைக்கு எட்டும் தூரத்தில் மலைகள், தொட்டுத் தழுவியபடி செல்லும் மேகங்கள், இரு புறமும் அடர்ந்து, உயர்ந்த மரங்கள், குளிர் தரும் தென்றல், மேனி தழுவிச் செல்லும் வன வாசம் மற்றும் நீர்ச் சாரல் என இந்த ஏரியாவே படு ரம்யமாக உள்ளது.

இந்க அருவிக்கு அருகிலேயே ஐயப்பன் கோவிலும் உள்ளதால், குளியலை முடித்துக் கொண்டு அய்யனை தரிசித்து விட்டு அமைதி பெற்று இல்லம் திரும்பலாம்.

நன்றி : மின்னஞ்சலில் இக்கட்டுரையை அனுப்பியவருக்கு

0 comments: