Saturday, January 3, 2009

'கிலி' வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள் : வைரமுத்து

கிளிநொச்சி விழுந்த செய்தி கேட்டு நெஞ்சில் இடி விழுந்தது என்று தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய 11 இலக்கிய சொற்பொழிவுகள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.

"என் தம்பி வைரமுத்து'' என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை தாங்கி, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் முடிவில் கவிஞர் வைரமுத்து ஏற்பு உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்று கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது என்ற செய்தி வருகிறது. நெஞ்சில் இடி விழுகிறது. ஒரு தமிழன், தமிழ் சகோதரி அங்கு அடிபடுகிற போது, எனக்கு குளிப்பதற்கோ, உண்பதற்கோ, சிரிப்பதற்கோ தோன்றவில்லை. கிளிநொச்சி வீழலாம். 'கிலி' வீழலாம். ஆனால் புலி வீழ மாட்டார்கள். அவனும் சேர்த்து தான் தமிழர். அவன் நம் இரத்தத்தின் நீட்சி. அவனை இழப்பதற்கு நாம் தயாராக முடியாது.

நாங்கள் போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்கிறோம். பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அங்கே போர்முனைக்கு செல்லுமாறு வேண்டிக்கொண்டோம். இன்னும் காலம் கடந்துவிடவில்லை.

இலங்கையில் போர் நிறுத்தத்தை எவ்வளவு வலியுறுத்துகிறோமோ அதைப் போல இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கும் போர் வந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம். பொருளாதார சீரழிவு வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு போரை உலகம் தாங்காது. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் ஒழிக்கப்படவேண்டும். போர் மூலம்தான் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றார் அவர்.




0 comments: