Monday, April 28, 2008

உள்ளம் கவர்ந்த ஜாக்கி சான்


தனது எளிய இனிய சுபாவத்தால் ஒரே நாளில் சென்னை மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான்.


தசாவதாரம் இசை வெளியீட்டு விழா நடந்த மேடைக்கு அவர் வந்தது முதல் நிகழ்ச்சி முடியும் வரை அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அரங்கில் கூடியிருந்த 5,000க்கும் மேற்பட்ட ரசிகர்களிடமிருந்து ஏக ஆரவாரம்.

நிகழ்ச்சி முழுவதிலும் அவருடன் மிகச் சிக்கனமான உடையில் ஒட்டிக் கொண்டேயிருந்த மல்லிகா ஷெராவத், இந்திய மேடைக் கலாச்சாரம் மற்றும் கடினமான பெயர்களைப் புரிந்து கொள்ள சானுக்கு மிகவும் உதவினார்.


நேரம் கிடைத்தபோதெல்லாம் சானைக் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார்.வணக்கம் என்ற தமிழ் வார்த்தையுடன் பேசத் துவங்கிய சான், "முதல் முறையாக சென்னை வந்திருக்கிறேன். எனக்கு இந்த ஊர் பிடித்துவிட்டது. ஏதோ ஒரு விதத்தில் எனக்கு என் சொந்த ஊரை ஞாபகப்படுத்துகிறது. அடிக்கடி நான் இங்கு வர நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்கும் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுங்கள்" என்றார் தன் ஹாங்காங் ஆங்கிலத்தில்.


நிகழ்ச்சியில் மற்றவர்கள் பேசுவது புரியாவிட்டாலும், மக்களின் உற்சாகத்தைப் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்தார். ஒவ்வொரு முறை தன் பெயர் உச்சரிக்கப்பட்டபோதும் எழுந்து நின்று கை கூப்பி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சான்,


முதல்வர் கருணாநிதி தன்னைப் பற்றி பேசியதை கூர்ந்து கவனித்தார்.பின்னர், முதல்வரின் பேச்சை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மொழிபெயர்த்துச் சொன்னபோது நெகிழ்ந்துபோய் முதல்வரின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.


நிகழ்ச்சி முடிந்து வெகு நேரமாகியும், விஐபிக்கள் மேடையைவிட்டு இறங்கியும் கூட, ரசிர்களின் ஆரவாரத்தைப் பார்த்து அங்கிருந்து போக மனமின்றி சிறிது நேரம் மல்லிகா ஷெராவத்துடன் நின்று கைகளை ஆட்டிக் கொண்டிருந்தார். பின்னர் சீன வழக்கப்படி தனது வணக்கத்தை மக்களுக்குத் தெரிவித்த சான், போகும்போது ரசிகர்களுக்கு தனது அன்பு முத்தங்களை காற்றில் பறக்கவிட்டார்.கரகோஷம் அடங்க பல நிமிடங்கள் தேவைப்பட்டன!

1 comments:

Jackiesekar said...

நன்றி ஜாக்கி பற்றி எழுதி பெருமை படுத்தியமைக்கு