Saturday, April 19, 2008

நாட்டுப்புறப் பாடகி தேனி குஞ்சரம்மா மரணம்

சென்னை: பிரபல நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான தேனி குஞ்சரம்மா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானவர் குஞ்சரம்மா. அதன் பின்னர் ஏராளமான படங்களில் நடித்தும், பாடியும் இருக்கிறார்.
வெண்கலக் குரலில் இவர் பாடியுள்ள பல பாடல்கள் பிரபலமானவை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சரம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.
குஞ்சரம்மாவுக்கு வயது 75. அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். பேரன், பேத்திகளும் உள்ளனர். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
குஞ்சரம்மாள் இறந்த தகவல் அறிந்ததும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.குஞ்சரம்மாளின் உடல் கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ. இரங்கல்:தேனி குஞ்சரம்மாள் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரைப்பட நடிகையும், நாட்டுப்புறப் பாடகியுமான திருமதி தேனி குஞ்சரம்மாள் அவர்கள் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அதிமுகவைச் சேர்ந்த தேனி குஞ்சரம்மாள் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments: